தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 6 ] : T.சௌந்தர்
தமிழ் திரை இசையில் அதிகம் பயன் பட்ட ராகங்களில் மோகன ராகம் முதன்மையான ஒன்று.இந்த ராகத்தைப் பயன்படுத்தாத திரை இசையமைப்பாளர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு அதிகம் பயன் படுத்தப்பட்ட அழகான ராகம் மோகனம்.
உலகெங்கிலும் உள்ள இசை வகைகளில் இந்த ராகத்தின் சாயல்களை நாம் கேட்டு வியக்கின்றோம்.இனம் ,மதம் ,மொழி என பலவிதமான வேறுபாடுகளால் மனிதன் பிரிந்து காணப்பட்டாலும் உணர்வு நிலைகள் ஒன்றாக இருப்பதால் இசையிலும் சில பொதுமைகள் இருப்பது தவிர்க்க முடியாததாகும்.அப்படிப்பட்ட பொதுமையில் இந்த உன்னத ராகத்தின் மெட்டுக்களை உலகம் முழுதும் வாழும் மக்கள் பாடி வருவதும் ஒன்று எனலாம்.
எனினும் தமிழர்கள் இசையில் காட்டிய ஈடுபாடு வியக்கத்தக்கது.ராகம் என்ற ஒரு வடிவத்தை அவர்கள் பன்னெடுங் காலத்திற்கு முன்பே கண்டடைந்ததது என்பது அவர்களது நுண் ஆற்றலுக்குச் சான்றாகும்
மோகனம் தொன்மையான தமிழ் ராகங்களில் முதன்மையான ஒன்று. பல் வேறு காலங்களில் ,பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த இந்த ராகம் பற்றிய ஆதிக் குறிப்பை தருவது சிலப்பதிகாரமே.ஆச்சியர் குரவை என்ற பகுதியில், கூத்துள் படுதல் [ ஆடத் தொடங்குதல் ] 17 வது பாடலில்
” அவர் தம்
செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோ ஒத்து
அந்நிலையே ஆடல்சீர் ஆய்ந்துளார் – முன்னைக்
குரல்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்பு உற்ற
கொல்லைப் புனத்துக் குருத்து ஒசித்தான் பாடுதும்
முல்லைத் தீம்பாணி என்றாள் “
வட்டமாக நின்று ஆயர் மகளிர் கூத்து ஆடும் பொழுது ” பாடுதும் முல்லைத் தீம்பாணி என்றாள் ” என இளங்கோ
பாடுகின்றார்.
இசை அறிஞர் எஸ்.ராமநாதன் மோகன ராகம் பற்றிய விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்.அவரின் ஆய்வுகள் முல்லைத் தீம்பாணி தான் இன்றைய மோகனம் என நிறுவியுள்ளன.மேற்குறித்த பாடலை மேற்கோள் காட்டியது மட்டுமல்ல பல்வேறு சான்றாதாரங்களையும் தருகின்றார்.
மிகப் பழக காலத்திலேயே சாதாரண மக்கள் இன்புற்று மிக இயல்பாக பாடிப் பயின்ற ராகம் மோகனம் ஆகும்.
“குழல் வளர்முல்லை ” [ அந்திமாலை சிறப்புச் செய் காதை - வரி 15 ] என்றதாலும் ,ஐந்து தலையுள்ளதான குழல் ; இருந்ததாக கூறப்பட்டிருந்தாலும் , இந்த மோகனமாகிய முல்லைப்பண்ணை ஐந்து துளையுள்ள குழலில் வாசித்தனர் என்று தெரிகின்றது.
” முல்லைப்பண் தற்போது வழங்கும் மோகனம் என்னும் கருத்தை வலியுறுத்தும் குறிப்பொன்று சேக்கிழாரின் ஆனாய நாயனார் புராணத்தில் உள்ளது.
” வள்ளலார் வாசிக்கும் மணித்துளைவாய் வேய்ங்குழலின்
உள்ளுறை அஞ்சு எழுத்தாக ஒழுகியெழு மதுரவொலி ” – [ ஆனாயநாயனார் புராணம் - 29 ]
“வேய்ங்குழலின் உள்ளுறை அஞ்சு” என்றமையால் ஐந்து சுரங்கள் என்ற பொருள் .என்கிறார் டாக்டர் எஸ்.ராமநாதன் [ சிலப்பதிகாரத்து இசைத் தமிழ் ]
இசை ஆய்வாளர் திரு மம்மது பின்வருமாறு விளக்குவார்.
“குரல் மந்தமாக இளி சமனாக…” என்றது சிலம்பு. ஆய்ச்சியர் குரவை வெண்பாவில் குறிப்பிடப்படும் சுரநிரல் (சரி2 க2 பத2) இன்றைய மோகனப் பண்ணிற்கு உரியதென முனைவர் எஸ். இராமனாதன் நிறுவியுள்ளார். எனவே சாதாரி என்றும் முல்லைத்தீம்பாணி என்றும் நம் முன்னோர் கூறியது இன்றைய மோகனப் பண்ணே. ” – [ தொல்காப்பிய தினைப் பண்கள் - நா.மம்மது ]
தொன்று தொட்டு மாணிக்கவாசகரின் திருவாசகம் மோகனராகத்திலேயே பாடப்படுகிறது.விருத்தபாடல்கள் பாடுவதற்கும் பொருத்தமான ராகம் எனக் கருதப்படுகின்றது.
இது ஒரு மூர்ச்சனா ராகமாகும். மூர்ச்ச்சனா ராகம் என்றால் கிரகபேதத்தால் புதிய ராகங்களை உருவாக்கக் கூடிய ராகம் என்று பொருள் படும்.
மோகன ராகத்தின் சுரங்கள் : ஸ ரி2 க3 ப த2 ஸ் – ஸ் த2 ப க3 ரி2 ஸ
மோகனத்தின் ரிஷபம் – மத்தியமாவதி ராகத்தையும்
காந்தாரம் – ஹிந்தோள ராகத்தையும்
பஞ்சமம் – சுத்த சாவேரி ராகத்தையும்
தைவதம் – சுத்த தன்யாசி ராகத்தையும்
கொடுக்கும் என்கிறார் இசையறிஞர் பி.சாம்பமூர்த்தி [ கர்நாடக் சங்கீத புஸ்தகம் - 3ம்பாகம் ]
இது 28 வது மேளகர்த்தா ராகமாகிய ஹரிகாம்போதியின் ஜன்யராகம்.
தமிழ் செவ்வியல் இசையில் மோகன ராமா [ தியாகராஜர் ] , நன்னு பாலிம்பா [ தியாகராஜர் ] , ஏன் பள்ளி கொண்டீரய்யா [ அருணாசலக் கவிராயர் ] , நாராயண திவ்விய நாமம் [ பாபநாசம் சிவன் ] , நின்னுகோரி [ துரைசாமி ] போன்ற பாடல்கள் பிரபல்யம் பெற்றன.
மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்திற்கான பண் ” முல்லைப்பண் ” [மோகனம் ] என வகைப்படுத்தப்பட்டாலும் முல்லை நில பண்ணாகவும் கருதப்பட்டது.
சுபகரமான ராகம் ,வர்ணனைக்கேற்ற ராகம் என்றும் எந்த வேளையிலும் பாடக்கூடிய ராகம் என்றும் , இசை நாடகங்களிலும் , நிருத்திய நாடகங்களிலும் பிரசித்த ராகம் என்று போற்றப்படுகின்ற ராகமாகும்.ராகங்களில் ஆண் , பெண் என்ற வகைப்படுத்தலில் மோகனம் பெண் ராகம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் [ பொதுவாக எல்லா மொழி திரைப்படங்களிலும் ] மிகவும் சர்வ சாதாரணமாகப் பயன் படக்கூடிய ராகங்களில் முதன்மையான ராகம் மோகனம் ஆகும்.வட இந்தியாவில் இந்த ராகத்தை ” பூப் ” , என்றும் பூபாளி என்றும் அழைக்கின்றனர்.
மோகனம் , ஹிந்தோளம் , சிவரஞ்சனி ,சுத்தசாவேரி போன்ற ராகங்கள் 5 சுரங்களைக் கொண்ட ராகங்களாகும்.பொதுவாக ஐந்து சுரங்களைக் கொண்ட ராகங்கள் [ Pentatonic Scale ragas ] இனிமைமிக்க ராகங்கள் ஆகும்.இன்று இந்தியா எங்கிலும் ஒலிக்கின்ற ராகமாகவும் உள்ளது.
அதுமட்டுமல்ல மோகன ராகம்.ஐரோப்பா , ஆபிரிக்கா , அரேபியா போன்ற நாடுகளிலும் ஒலிக்கின்ற ராகம்.
ஐரோப்பிய இசையால் உந்துதல் பெற்ற ரவீந்தரநாத் தாகூர் மோகனத்தின் சாயலைக் கொண்ட ஸ்கொட்லாண்ட் நாட்டுப்புற மெட்டில் அமைந்த பாடலை [ Auld Lang Syne ] தனது இசை நாடகத்தில் பயன்படுத்தியுள்ளார்.அதனை அவர் Scotland pupaali என்று அழைத்தார்.
முக்கியமாக தென் கிழக்கு ஆசிய நாடுகளான சீனா , ஜப்பான் ,கொரியா ,தைவான் ,வியட்னாம் , கம்போடியா , தாய்லாந்து , பிலிப்பைன்ஸ் , நேபாளம் , பூட்டான் , பர்மா போன்ற நாடுகளில் மிகவும் சர்வ சாதாரணாக கேட்டக்கூடிய ராகமாகும்.தடுக்கி விழும் இடங்களில் எல்லாம் மோகனம் தான் ஒலிக்கும் என்று கூறக்கூடியளவுக்கு இந்த மோகனம் பயன் பாட்டில் உள்ளது எனலாம்.இந்த நாடுகளின் தேசிய ராகம் என்று சொல்லுமளவுக்கு மோகனம் ஆதிக்கம் செலுத்துகிறது.
மேற்க்குறிப்பிட்ட நாடுகளின் நாட்டுப்புற இசைவடிவங்களில் , பாடல்களில் இந்த ராகத்தின் சாயல் தூக்கலாத் தெரியும்.ராகம் என்ற அமைப்பில் அவர்கள் பயன்படுத்தாவிட்டாலும் மெட்டுக்கள் இந்த ராகத்துள் அவை அடங்கும் எனலாம்.
ஆபிரிக்காவில் சூடான் நாட்டின் நாட்டுப்புற இசையில் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ள ராகங்களில் இதுவும் ஒன்று.
மக்களை மிக எளிதில் கவரக்கூடிய தன்மை இந்த ராகத்தில் இருப்பதால் சினிமா இசையமைப்பாளர்களும் இந்த ராகத்தால் கவர்ந்திளுக்கப்பட்டது இயல்பே. தங்கள் ஆளுமைக்கு ஏற்ப பல இசை வடிவங்களாக் பின்னி தந்திருக்கிறார்கள்.
வானத்தில் நட்சத்திரங்கள் நிறைந்திருப்பது போல தமிழ் சினிமாவில் மோகன ராகத்தால் பாடல்கள் நிறைக்கப்பட்டுள்ளன.மெல்லிதான திரையை விலக்கினால் மின்னி ஜொலிக்கின்ற வைரங்கள் போல ஏராளம் பாடல்கள் விரவிக் கிடக்கின்றன.
இந்த ராகத்தை எல்லா இசையமைப்பாளர்களும் தங்கள் திறமைக்கு ஏற்ப தனித் தன்மையுடன் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.அவர்கள் இசையமைக்கும் படங்களில் மற்ற ராகங்களை விட அதிகமான எண்ணிக்கிகையில் மோகனத்தில் பாடல்களைத் தந்திருக்கின்றார்கள்.அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர்களான மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் , இசை ஞானி இளையராஜா போன்ற இசை மேதைகள் அதிகப்படியான பாடல்களை இந்த ராகத்தில் தந்திருகின்றார்கள்.இவர்கள் இருவரையும் ” மோகனக்கள்ளர் ” என்று அழைக்கும் அளவுக்கு மிக ஈடுபாட்டோடு மிக நல்ல பாடல்களைத் தந்திருக்கின்றார்கள்.
உணர்வு நிலைகளையும், காலத்தையும் குறியீடாகக் காண்பிப்பதில் இசைக்கலை மற்ற எல்லாக் கலைகளையும் விடவும் முதலிடத்தில் இருக்கின்றது.எல்லாக் காலத்திலும் பாடக் கூடிய ராகமாக மோகனம் திகழ்கின்றது.
காலை வேளையின் குறியீடாக பூபாள ராகம் அடையாள பெற்றுள்ளது.தேவாரபாடல்கள் மோகனத்திலும் பாடப்படுவதால் , இறைவனைப் புகழ்ந்து , இனிமையாகப் பாட மோகனமும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
கேட்பவர்களை உருக வைக்கும் இந்த ராகம் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தன்னிகற்றற்றது.மென்மையின் மேன்மையை உணர்த்தும் அதே நேரம் வீர உணர்வையும் வெளிப்படுத்தக் கூடிய சிறப்பு வாய்ந்த ராகம்.மன உணர்வுகளை மாண்புறச் செய்யும் ராகம்.எல்லாக் காலங்களுக்கும் பொருந்தும் ராகமாதலால் திரையில் பல்வேறு சூழ் நிலைக்கு பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
சிலப்பதிகாரத்தில் முல்லைத் தீம்பாணி என்றழைக்கப்படுவது இன்றைய மோகனமே என்று நிறுவிய எஸ்.ராமநாதன் அந்த ஆய்வின் முடிவில் எழுதியுள்ளமை மிக முக்கியமானதாகும்.அவர் பின் வருமாறு எழுதுகிறார் ,
” மேற்காட்டிய சான்றுகளால் எந்நாட்டிசையிலும் காணப்படும் இந்த மோகனம் எனும் முல்லைப்பண்ணை , இசைத்துறையில் முறைபோகிய நம் முன்னோர் – ஏன் குரவை ஆடிய இடைச் சிறுமியரும் அறிந்திருந்தனர் என்பதை நிலை நிறுத்தவே இவ்வளவு கூறினோம்.”
ஆக , மோகனம் எங்கள் கொள்ளுப் பாட்டியின் கொள்ளுப்பாட்டி ஆவாள்.அருமை மோகனம் எங்கள் சொத்து.அதைக் கொண்டாடுவோம்.
தமிழ் சினிமாவில் வைகறைப்பாடலாக , காதல் பாடலாக , எழுச்சிப்பாடலாக , சோகப்பாடலாக , நகைச்சுவைப் பாடல்கள் என நவரசங்களையும் வெளிப்படுத்தும் ஏராளமான பாடல்களைத் தந்து பிரமிக்க வைத்திருக்கின்றார்கள்.
மோகனம் list
01 . கிரி தர கோபால – படம் :மீரா 1945 – பாடியவர் :எம்.எஸ்.சுப்புலட்சுமி இசை:எஸ்.வீ .வெங்கட் ராமன்
1940களில் வெளிவந்த மிகப் பிரபல்யமான பாடல்.
02 . வெற்றி எட்டு திக்கும் – படம் :பராசக்தி 1952 – பாடியவர்கள் :T.S.பகவதி
03 . ஆகா இன்ப நிலாவினிலே – படம் :மாயா பஜார் 1956 – பாடியவர்கள் :கண்டசாலா பி.லீலா இசை:கண்டசாலா
மோகனத்தின் இனிமையை மிக எளிமையாகக் காட்டும் பாடல்.நிலவின் அலையில் இரவின் அமைதியில் தென்றல் சுகம் தரும் பாடல.மெல்லிசைக்கு சிறந்த எடுத்துக் காட்டான பாடல்.
04 . மோகன புன்னகை ஏனோ – படம் :பத்தினி தெய்வம் 1959 – பாடியவர்கள் : TMS + பி.சுசீலா இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
மெல்லிசைமன்னர்கள் இசையமைத்த செவ்வியல் இசை பாங்காக அமைந்த ஆரம்பகாலப் பாடல்.மோகனத்தின் உள்ளொளியை செம்மையாக காட்டும் அழகான பாடல்.
05 . பருவம் பார்த்து அருகில் – படம் :மருதநாட்டுவீரன் 1960 -பாடியவர் :TMS இசை: எஸ்.வீ.வெங்கட்ராமன்
கலைநயம் மிக்க மோகனத்தின் எழிலை காட்டும் அழகான எளிமையான சங்கதிகள் கொண்ட பாடல். எஸ்.வீ .வெங்கட்ராமனின் ஆற்றல் மிக்க கலைத்திறனை வெளிப்படுத்தும் பாடல்.”வாடை என்னும் காற்று வந்து வதைத்திட கண்டாயோ சென்றாயோ ” என்னும் வரிகளில் மோகனம் உச்சம் பெரும்.அற்புதமான சங்கதிகள் கொண்ட பாடல்.
06 . ஒ ..ஒ ..நிலாராணி உளமே கவர்ந்தாய் நீ – படம் :சித்தூர் ராணி பத்மினி 1963 – பாடியவர் :சீர்காழி இசை:ஜி.ராமநாதன்
செவ்வியல் தழுவிய மெல்லிசை இசைப்பாங்கில் [ SemiClassical ] அமைக்கப்பட்ட பாடல்.மரபு சார்ந்த செவ்வியல் இசை தழுவிய மெல்லிசை என்ற தனி உலகத்திற்கு நம்மை அழைத்து மகிழ்வித்த இசை மேதை ஜி.ராமனாதனின் அபாரக் கற்பனைத் திறன் மிக்க பாடல்.மிகவும் கஷ்டமான சங்கதிகளைக் கொண்ட இந்தப் பாடலை தனது தேனினும் இனிய குரலால் சீர்காழி கோவிந்த ராஜன் உயிர்த்துடிப்புடன் பாடி இருக்கின்றார்.இப்படி எல்லாம் கஷ்டமான சங்கதிகளைப் பாட முடியுமா என்று பிரமிக்க வைக்கும் பாடல்.இந்தப் பாடலில் சீர்காழியும் ,ஜி.ராமநாதனும் வானுயர்ந்து நிற்கின்றார்கள்.#
07 . காற்று வெளியிடை கண்ணாம்மா – படம் :கப்பலோட்டிய தமிழன் 1960 – பாடியவர்கள் :பி.பி.ஸ்ரீநிவாஸ் +பி.சுசீலா – இசை:ஜி.ராமநாதன்
பாரதி எழுதிய அமைப்பழகும் சொல்லினிமையும் மிக்க கவிதையை ஆண் ., பெண் பாத்திரங்களுக்கு ஏற்ப அவர்களின் மனப்போக்கிற்கு பொருத்தமாக வகை பிரித்து , அதற்குப் பொருத்தமாக நெஞ்சங்களில் ஊறித் திளைக்க் வைக்கும் ,அந்த உணர்ச்சிகளுக்குஎழில் தரும் ஒரு மெட்டை அமைத்த இசை மேதை ஜி.ராமநாதன் தந்த மோகன விருந்து.
ஏற்க்கனவே எழுதப்பட்ட பாடலுக்கு இசையமைப்பது என்பது இசையமைப்பாளர்களுக்கு சவாலான விசயமாகும்.பாரதியின் பல பாடல்களுக்கு ஜி.ராமநாதன் ஆழ்ந்த ஈடுபாட்டோடு இசையமைத்த முன்னோடியாவார்.கப்பலோட்டிய தமிழன் படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இசையின் கலங்கரைவிளக்கங்கள் எனலாம்.
08 . அன்பே உந்தன் முன்னாலே – படம் :ஆரவல்லி 1957 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + ஜிக்கி -இசை:ஜி.ராமநாதன்
இந்தப் பாடலின் ஆரம்ப துள்ளல் இசையிலேயே மோகனத்தின் அற்ப்புத்தத்தை காட்டி நம் மனங்களைக் கனிய வைத்து விடுவார் ராமநாதன்.கேட்கக் கேட்க ஓயாத இனிமையை தரும் பாடல்.ஏ.எம் ராஜாவும் , ஜிக்கியும் இணைந்து பாடிய பாடலகளில் குறிப்பிடத் தக்க பாடல்.
09 . நிலவும் மலரு பாடுது – படம் :தேன் நிலவு 1960 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா+ பி.சுசீலா – இசை:ஏ.எம்.ராஜா
” மெல்லிசையின் நாயகன் ” ஏ.எம்.ராஜா இசையமைத்து சுசீலாவுடன் இணைந்து பாடிய இனிமையும் மென்மையும் மிக்க பாடல. காதல் உணர்வை அற்ப்புதமாகப் பிரதிபலிக்கக் கூடிய மோகனத்தில் பல பாடலகளை பாடியுள்ள ஏ.எம்.ராஜா இசையமைப்பதிலும் வல்லவர் என நிரூபித்தவர்.தமிழில் மெல்லிசைப் பாடல்களைத் தந்த முன்னோடியானஏ.எம்.ராஜா மோகனத்திற்க்கு புதிய ஒளியை காண்பித்த பாடல்.தமிழில் வெளிவந்த சிறந்த காதல் பாடல்கள் வரிசையில் இடம் பெரும் இந்தப் பாடல் தமிழர் வாழ்வோடு பிணைந்த பாடல்.
10 . பழகத் தெரிய வேண்டும் – படம் :மிஸ்ஸியம்மா – ஏ.எம்.ராஜா+ பி.சுசீலா – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
எஸ்.ராஜேஸ்வரராவ் இசையமைத்த பகழ் பெற்ற பாடல். 1950 களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த ஆரம்ப கால மோகனராகப்பாடல்.மோகனம் என்றதும் சினிமாவில் இந்தப் பாடலை இலகுவாக அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரபல்யமான பாடல்.கருத்து ஒன்றை எடுத்து இயம்புவதர்க்குப் பொருத்தமான ராகம் மோகனம் என்பதை மெய்ப்பிக்கும் பாடல்.சாகாவரம் பெற்ற பாடல்.
11 . துள்ளாத மனமும் துள்ளும் – படம் :கல்யாணப் பரிசு 1959 – பாடியவர் :ஜிக்கி – இசை:ஏ.எம்.ராஜா
ஏ.எம்.ராஜாவின் அழகான மெல்லிசைவார்ப்பு.பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் இசையின் உன்னதை எளிமையான தமிழில் தந்த பாடல்.பாடல் வரியா இசையா என்று போட்டி போடும் பாடல்.இரண்டும் இணைந்து ஒன்றுக்குள் ஒன்றாகி நின்று அழகியல் உணர்வை மேம்படுத்தும் பாடல்.எப்பொழுதும் கேட்டககூடிய பாடல்.காலத்தால் இந்த பாடலைக் கொல்ல முடியாது.
12 . நான் வாழ்ந்ததும் உண்னாலே – படம் :விடிவெள்ளி 1962 – பாடியவர் :ஜிக்கி – இசை:ஏ.எம்.ராஜா
இன்ப ரசம் தரும் ராகம் மோகனம் என்ற விதியை மாற்றி சோக ரசத்திலும் சோபிக்கக் கூடிய ராகம் என்று ஏ.எம்.ராஜா இசையமைத்த பாடல்.எளிமையான இசை நம்மை வாட்டி வதைக்கும்.ஜிக்கி நன்றாகப் பாடிய பாடல்.
13. அமுதைப் பொழியும் நிலவே – தங்கமலை ரகசியம் – பி.சுசீலா – இசை:T.G.லிங்கப்பா
மோகன ராகத்தின் கிளைகளில் ஒன்று இந்த அற்ப்புதமான பாடல்.தமிழில் வெளியான இந்தப் பாடல் ஹிந்தியிலும் மிகப் புகழ் பெற்றது.கன்னட பதிப்பில் ” அமர மதுரா பிரேமா ” என்று தொடங்கும் இந்தப் பாடல் , ஹிந்தியில் ” சமகோ பூனம் சந்தா ” என்று ஆரம்பிக்கும்.இந்தப் பாடலைப் பாடியவர் ஆஷா போஸ்லே.அந்தக் காலத்தில் ஹிந்தியிலிருந்து தழுவல்களாக பல பாடல்கள் வெளிவந்த நிலையில் , இந்தப்பாடலும் ஹிந்தியின் தழுவல் என்றே பேசப்பட்டது.இலங்கை வானொலியின் ஹிந்தி பாடல் நிகழ்ச்சியில் அதிகம் ஒலிபரப்பட்ட பாடல்களில் இதுவும் என்று கேள்விப்பட்டுள்ளேன்.இந்தபாடல் தமிழில் இருந்து ஹிந்தி சென்ற பாடல்.சில வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் T.G.லிங்கப்பா இதனை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இன்றும் இந்தப்பாடலை இசை நிகழ்ச்சிகளில் சிறுவர், சிறுமிகள் பாடி நம்மை மகிழ்விக்கின்றனர்.அதன் இசை அவ்வளவு வசீகரமானது.
14 . ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் – பாலும் பழமும் – பி.சுசீலா இசை:விஸ்வநாதன் -ராமமூர்த்தி
இந்தப் பாடல் “அமுதைப் பொழியும் நிலவே ” பாடலின் எதிரொலி என்று சொல்லுமளவுக்கு சாயல்களில் ஒற்றுமை நிறைந்துள்ள பாடல்.ஆனாலும் வாத்திய இசையில் மறைக்க பிரயத்தனம் காட்டப்பட்டிருப்பினும் , ஆங்காங்கே சாயல்கள் தலை தூக்கி நிற்கின்ற பாடல்.இரண்டு பாடலையும் மாறி , மாறிப் பாடிப்பார்த்தால் எது எது தெரியாத மயக்கம் தந்து விடும் பாடல்.இருந்தாலும் தனித் தனியே கேட்கும் போது இரண்டு இனிமையான பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை.
காலையில் பாட பொருத்தமான ராகம் என்று கருதப்படுகின்ற பூபாளம் என்ற ராகத்திற்கு ஈடாக மோகனத்தில் அமைத்த மெல்லிசைமன்ன்ர்களின் இசைமுனைப்பைப் வியக்கலாம்.சுசீலாவின் தேனினும் இனிய குரலால் பாடல் அமரத்துவம் அடைந்து விடுகிறது.
15 .மலர்கள் நனைந்தன பனியாலே – படம் :இதயக்கமலம் 1965 – பி.சுசீலா – இசை:கே.வி.மகாதேவன்
மீண்டும் காலையில் பாடப்படும் பாடலுக்கு மோகனம் பயன்பாடுள்ள பாடல்.துல்லியமாக மோகன ராகம் தெரியக் கூடிய வகையில் அமைக்கப்பட்ட இனிமையான பாடல்.மனதை நெகிழ வைக்கின்ற பாடல்.பாடல் ஆரபிக்கும் போதே கதிர்கற்றைகளை விரித்தெளுப்பும் கதிரவனின் பேரழகை கண்முன்னால் கொண்டு வரும் வாத்திய அமைப்பு வியக்க வைக்கும்.
இசைமேதை கே.வீ.மகாதேவன் இந்த ராகத்தில் எவ்வளவு தோய்ந்திருந்தால் இப்படியாக நம் இதய ஆழத்தில் தங்க வைக்கும் ஒரு பாடலைத் தந்திருப்பார் என எண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. பாடியவரைப் பற்றி சொல்லவே தேவை இல்லை.
மோகனராகம் என்னவெற்று ஒருவர் அறிய வேண்டும் என்றால் இந்தப் பாடலைப் பத்துத் தடவைகள் கேட்டால் போதும்.
16 . கண்மணியே உன் இதய வீணையின் – படம் :மனிதன் மாறவில்லை 1962 – பாடியவர் :உதயபானு – இசை:கண்டசாலா
சிறந்த பாடகரும் இசையமைப்பாளருமான கண்டசாலாவின் இனிய வார்ப்பு.அருந்தலாக சில பாடல்களை மட்டும் பாடிய உதயபானுவின் இனிமையான பாடல்.இந்தப் பாடலை ஏ.எம். ராஜாவில சாயலில் பாடியிருப்பார் உதயபானு.
மனிதன் மாறவில்லை படத்தின் ஆரம்பக் காட்சியிலயே வரும் பின்னணி இசை மோகன ராகத்தில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.கலைக்குரிய ராகம் பூபாளம் என்று சொல்லப்பட்டாலும் திரை இசையமைப்பாளர்கள் மோகனததையும் மிக அதிக அளவில் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கின்றார்கள்.
16 . வெள்ளிக்கிழமை விடியும் வேளை -படம் : நீ 1969 – பாடியவர் :பி.சுசீலா – இசை:விஸ்வநாதன்
இந்தப் பாடலும் அதிகாலைப் பாடல் வரிசையில் வருகின்ற பாடல்.மிகவும் இனிமையான பாடல்.
17 . ஒரு நாள் யாரோ – படம் :சர்வர் சுந்தரம் 1969 – பாடியவர் :பி.சுசீலா – இசை:வி.குமார்
இசையமைப்பாளர் வி.குமார் இசையமைத்த இனிமையான மோகனப் பாடல்.விஸ்வநாதனின் பாடல் என்றே எண்ணத் தோன்றுகின்ற பாடல்.கே.வீ.மகாதேவன்,விஸ்வநாதன் போன்ற இசையமைப்பாளர்களின் காலத்திலேயே அறிமுகமாகி பல இனிய பாடலக்ளைத் தந்த வி.குமார் தனித்தனமையுடன் இசையமைக்கும் ஆற்றல் மிக்கவர்.அவரின் மிக அருமையான மோகனம் தான் இந்தப்பாடல்.
18 . எழில் ஜோதி வானவா – படம் :விப்ரநாராயணா 1958 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + ஆண்டாள் – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
காலைக் கதிரவனாம் ஆதவனை போற்றி புகழும் பாடல்.காலையின் அமைதியையும் , உறங்குபவர்களை மென்மையாக தட்டி எழுப்புவது போன்ற பாடல்.ஏ.எம்.ராஜா இந்த வகைப் பாடல்களை மிகச் சிறப்பாக பாடக் கூடியவர்.ஆண்டாள் என்ற பாடகி ஒரு சில் பாடல்களே தமிழ் சினிமாவில் பாடியிருக்கின்றார்.அந்த வகையில் இந்த பாடல் அவரது பெயரை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தும் பாடல் எனலாம்.
19 . மலரின் மதுவெல்லாம் இன்னிசை தானே – படம் :விப்ரநாராயணா 1962 – ஏ.எம்.ராஜா + பி.பானுமதி – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
ஏ.எம்.ராஜா அதிகமான மோகன ராகப் பாடலகளை பாடியிருப்பதால் அவருக்கும் மோகனராகத்திர்க்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பது போல ஒரு வித எண்ணம் ஏற்ப்படும். இந்தப் பாடலை கேட்கும் போது அதனை உணரலாம்.மென்மையான அவரது குரல் மனத்தில் இன்ப சுகத்தை தரும் .அந்த மென்மைக்கு ஈடு கொடுத்து , பி.பானுமதி தனது கம்பீர குரலை மென்மையாக்கி ஒன்றித்து பாடி உளமகிழ்ச்சி தரும் பாடலாக்கியிருப்பார்
பல இனிமையான பாடல்களைத் தந்த எஸ்.ராஜேஸ்வரராவ் அவர்களின் அழகிய மோகன வார்ப்பு.
20 . துணிந்தால் துன்பமில்லை – படம் :கோடி வாழ்ந்தால் கோடி நன்மை – பி.சுசீலா இசை: T.சலபதிராவ்
பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கேற்ப துள்ளல் இசையில் அமைந்த பாடல்.மோகனராகப் பாடல்.மெல்லிசைப் பாங்கில் துரித கதியில் பாடப்படுவதால் ராகத்தின் சங்கதிகள் குறைத்து பாடப்படுகின்ற பாடல்.
T.சலபதிராவின் இனிமையான மோகன ராகப்பாடல்.
22 . சல சல ராகத்திலே – படம் :கோடி வாழ்ந்தால் கோடி நன்மை – பி.சுசீலா இசை: T.சலபதிராவ்
T.சலபதிராவின் இனிமை குன்றாத இன்னுமொரு மோகன வார்ப்பு.பாடலுக்குப் பாடல் புதிய கோணங்களில் திரை இசையமைப்பாளர்கள் தரும் விநோதங்கள் நம்மை வியக்க வைக்கும்.இந்த பாடலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.இசையின் சிறப்பை எடுத்து இயம்பும் பாடல்.அதற்குப் பொருத்தமான இசையும் கலந்து சாகா வரம் பெற்று நிலைத்த பாடல்.
22 . உள்ளம் கொள்ளை போகுதே -படம் : நீலமலைத் திருடன் 1959 – பாடியவர் :ஜிக்கி – இசை:கே.வி.மகாதேவன்
மிகவும் பிரபல்யமான அழகான பாடல்.அருமையான சங்கதிகள் விழுகின்ற மெல்லிசைப்பாடல்.இந்த பாடலின் துல்லியம்மான பாதிப்பில் சில வருடங்களுக்கு முன்னே வெளி வந்து புகழ் பெற்ற பாடல் தான் ” பிரியா ..
பிரியா ..பிரியா ஒ பிரியா ” என்ற தேவா இசையமைத்த பாடல்.
23 . வந்த நாள் முதல் – படம் :பாவமன்னிப்பு 1961 – பாடியவர் : TMS – இசை:விஸ்வநாதன் – ராமமூர்த்தி
மோகனத்தை புதுமையாக கொண்டு அமைத்த பாடல்.மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடிய இந்த ராகத்தின் கமகங்களை மறைத்து மிக , மிக அருமையாக , அற்ப்புதமான மெல்லிசையாக அமைத்த படைப்பாற்றல் மிக்க மெல்லிசைமன்னர்களின் ஒப்பற்ற பாடல்.T.M.சௌந்தரராஜன் தனது பாணியிலே மிகவும் கம்பீரமாகப் பாடிய பாடல்.இப்படி ஒரு கற்பனையா என்று இந்தப் பாடலைக் கேட்கும் தோறும் ஆனந்த அதிர்ச்சியும் , வியப்பும் தருகின்ற பாடல்.
24 . பாவலன் பாடிய புதுமை பெண்ணை – படம் :முகமது பின் துக்களக் 1973 – பாடியவர் :TMS – இசை:MS.விஸ்வநாதன்
1970 களில் வெளிவந்த இந்த பாடலில் நகைச்சுவை உணர்வு மிகுந்திருக்கும்.
MS.விஸ்வநாதனின் அழகான கற்பனை.பாடல்களுக்கிடையே Happy Birthday to You என்று பாடும் போது மோகனம் இனிக்கும்.
25 . சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை – படம் :எங்கள் செல்வி 1959 -பாடியவர் :பி.சுசீலா – இசை:கே.வி.மகாதேவன்
மகிழ்ச்சியாக ஆரம்பிக்கும் பாடல் மெது மெதுவாக மாறி சோக உணர்வையும் தருகின்ற பாடல். இன்பத்தில் துன்பத்தை இழைத்து வருகின்ற அழகுப் பாடல்.
26 . நிலையாக என் நெஞ்சில் ஒழி வீசும் தெய்வம் – படம் :ஆடவந்த தெய்வம் 1959 – பாடியவர் :பி.சுசீலா – இசை:கே.வி.மகாதேவன்
குதூகலமிக்க மோகனராகத்தில் இன்பம் போல துனபதையும் இணைத்து இசைமேதை கே.வி.மகாதேவன்தந்த
சிறப்பான பாடல்.இழப்புக்களையும் , சோகங்களையும் ,ஆசைகள நொடிப் பொழுதில் மறைத்து போனாலும் உள்ளம் தாங்கும் தைரியத்தையும் தரும் ஆற்றல் மிக்க பாடல்.மோகனத்தில் இந்த எல்லாம் கலந்த உணர்வை தந்த இந்த பாடல் மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்த பாடலாகும்.
27 . ராதா மாதவ வினோத ராணி – படம் :பத்தினி தெய்வம் 1959 – பாடியவர்கள்: TMS +பி.சுசீலா -இசை:T.G.லிங்கப்பா
மோகனம் பளீச் எனத் தெரியும் இனிமையான காதல் பாடல்.T.G.லிங்கப்பாவின் அழகான மோகனக் கற்பனை.எல்லையற்று விரிந்து செல்லும் இசையமைப்பாளர்களின் கற்பனைக்கு அளவில்லை.எனினும் பாடல்களின் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக அவர்கள தரும் பாங்கு வியக்கத் தக்கது.கர்க்கண்டாய் இனிக்கின்ற காதல் கீதம்.
28 . இன்பமான இரவிதுவே – படம் :மனிதன் மாறவில்லை – பாடியவர்கள் :ஏ.எல் ராகவன் +பி.சுசீலா – இசை:கண்டசாலா
இந்த பாடல் கண்டசாலாவின் கற்பனை அரிதாக பாடிய ஏ.எல்.ராகவன் பாடிய இனிமையான பாடல்.சிந்தை மயக்கும் வெண்ணிலா ஒளியில் காதலர் தனிமையில் பாடும் மதுரமான இரவுப்பாடல்.இசையும் பாடியவர்களும் இனிமை சேர்த்திருக்கிறார்கள்.இனிமையான நினைவு அலைகளை நெஞ்சில் எழுப்பும் இனிமையான பாடல்.
29 . இன்ப லோக ஜோதி ரூபம் போல – படம் :தூய உள்ளம் – பாடியவர்கள் :TMS + பி.சுசீலா -
இசைமேதை பெண்டலாயா நாகேஸ்வரராவ் இசையமைத்த பாடல்.மோகனத்தில் பல விதமாக இசையமைத்தாலும் இந்த பாடலில் தனித் தனமையாக ஒலிக்கும் பாடல்.
30 . தில்லையம்பல நடராஜா -படம் : சௌபாக்கியவதி – பாடியவர் :TMS – இசை: பெண்டலாயா நாகேஸ்வரராவ்
மிக அழகான பாடல். மோகனராகத்தில் அமைந்த இந்தப் பாடல் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்ற பாடல். இந்தப் பாடலின் தொடக்கத்திலும் , முடிவிலும் இசைத் தட்டில் இல்லாத அருமையான இசை சேர்ப்புக்களை படக காட்சியில் நாம் ரசிக்கலாம். பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.காலை நேரத்தில் பாடபடுவதாக அமைக்கப்பட்ட பாடல்.
31 . ஆண்கள் குணமே அப்படித்தான் – படம் : நான் வளர்த்த தங்கை,1958 – பாடியவர்கள் :TMS + பி.சுசீலா இசை:- பெண்டலாயா நாகேஸ்வரராவ்
எள்ளலும் துள்ளலும் கேலியும் கிண்டலும் ஒன்றாக இணைந்த இனிமையை மோகனத்தில் மிக அழகாக வடிக்கப்பட்ட பாடல்.மிக , மிக இனிமையான பாடல். இந்த பாடலை எழுதியவர் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்.
32 . இக லோகமே இனிதாகுமே – படம் :தங்கமலை ரகசியம் – பாடியவர்கள் :TMS + பி.லீலா இசை:T.G.லிங்கப்பா
மோகன ராகத்தில் ஆரம்பித்து பின் ராக மாலிகையாக முடியும் பாடல்
33 . உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே – படம் :புனர்ஜென்மம் – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா – இசை : T.சலபதிராவ்
தமிழ் திரையில் சில படங்களுக்கு இசையமைத்தவர் T.சலபதிராவ்.மோகனராகத்தில் தன பங்குக்கு பல நல்ல பாடல்களைத் தந்த இசையமைப்பாளர்.எத்தனயோ பாடலகளைக் கேட்டாலும் , அதிலும் ஒரு புது ரகமாக யாவர் இசையமைத்த இனிமையான காதல் பாடல்.தென்றல் வீசும் சுகம் தரும் பாடல்.பாடியவர்களால் இன்னும் இந்த மேலோடி இனிமை பெற்றிலங்குகிறது.
34 . கேட்டுப் பார் கேட்டுப்பார் – படம் :மாடி வீட்டி மாப்பிள்ளை – பாடியவர்கள் :TMS + பி.சுசீலா – இசை : T.சலபதிராவ்
T.சலபதிராவ் கடைசியாக இசையமைத்த பாடலகளில் ஒன்று. மிகவும் விறுவிறுப்பான பாடல் என்றாலும் மனதை ஈர்க்கும் வசிய பண்ணும் மெல்லிசைப்பாடல்.
35 . வந்து வந்து கொஞ்சுவதேன் – படம் : பெண்ணின் பெருமை – பாடியவர் :ஜிக்கி இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
மிடுக்கான குரலில் ஜிக்கி பாடிய அற்ப்புதமான மோகனராகப் பாடல்.மோகனத்தின் இனிமையை ,அதன் துடிப்பை இசையமைப்பாளர் அழகாக வடித்திருப்பதை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.
36 . கையும் கையும் கலந்திடவா – படம் :கடன் வாங்கிக் கல்யாணம் – ஏ.எம்.ராஜா +பி.லீலாஇசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
காதல் பாடல்களில் ஜொலிக்கும் மோகன ராகத்தின் சிறப்புக்கு உதாரணம் மிக்க பாடல்.
37 . எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல் – படம் :கடன் வாங்கிக் கல்யாணம் -ஏ.எம்.ராஜா+பி.லீலாஇசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
இசையமைப்பாளர்களின் கற்பனையை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த பாடல்.ஒரே படத்தில் ஒரே ராகத்தை வைத்துக் கொண்டு அவர்கள காட்டிய வித்தைகளை எண்ணி எண்ணி வியக்கலாம்.
38 . திருவே என் தேவியே வாராய் – படம் :கோகிலவாணி – சீர்காழி + ஜிக்கி இசை:ஜி.ராமநாதன்
ஜி.ராமனாதனின் ஈடிணையற்ற படைப்பு. செவ்வியல் பாணியில் மெல்லிசைக்கு அவர் தந்த இடம் அபாரமானது.ராமனாதனின் தனித்துவம் மிளிரும் பாடல்.பாடியவர்களும் அர்ப்புதமாகப் பாடிய பாடல்.
39 . சிரித்துச் சிரித்து என்னை – படம் :தாய் சொல்லைத் தட்டாதே – TMS + பி.சுசீலா இசை:கே.வீ .மகாதேவன்
1960 களின் மெல்லிசை யுகத்தில் நுழைந்த மோகனம் இந்தப் பாடல்.இந்தப் பாடலில் மோகனம் முழுமையாக மறைத்து வைக்கப் பட்டது போன்று அமைக்கப்பட்ட பாடல்.
40 . கொடுத்துப் பார் பார் உண்மை அன்பை – படம் :விடிவெள்ளி 1960 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + பி.சுசீலா + திருச்சி லோகநாதன் ஜிக்கி – இசை:ஏ.எம்.ராஜா
விறு விறுப்பான நடையில் மோகனம் நடை பயிலும் பாடல்.வாத்திய இசையும் , பாடிய பாடகர்களும் ராகத்தின் உயிர் நிலையத்தை காட்டியிருக்கின்றனர்.எல்லாவிதமான சூழ்நிலைகளுக்கும் வளைந்து கொடுக்கும் ராகம் எனதை சினிமா இசையமைப்பாளர்கள் நிலைநாட்டிய ராகம் மோகனம்.
41 . வெள்ளிமணி ஓசையிலே -படம் : இருமலர்கள் – பாடியவர் :பி.சுசீலா – இசை: MS.விஸ்வநாதன்
தன்னுடைய தனித்துவத்தை காண்பிக்கும் மெல்லிசை மன்னரின் அழகான மோகனராகப்பாடல். சூப்பர் மோகனம்.மகிழ்ச்சிப் பாடலிலும் செனாய் என்ற அற்ப்புத வாத்தியத்தை உணர்ச்சி ததும்பும் வகையில் பயன்படுத்தியுள்ளமை பாடலின் உச்சம் என்று சொல்லலாம்.அங்கே மோகனம் நம் உயிரைத் தொடுகின்றது.இதுவும் காலையில் பாடும் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.திரையில் பாடல் முடிவில் வரும் வீணை இசையும் அருமையாக ஒலிக்கும்.
42 . வெள்ளிக்கிழமை விடியும் வேளை -படம் : நீ 1969 – பாடியவர் :பி.சுசீலா – இசை:விஸ்வநாதன்
இந்த பாடலும் காலை நேர பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.எத்தனை வகையாக இசையமைத்தாலும் இனிக்கும் ராகம் மோகனம்.
43 . செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் -படம் : நான்கு கில்லாடிகள் – பாடியவர்கள் :TMS + பி.சுசீலா – இசை:.வேதா
மெல்லிசையின் சிகரத்தில் நிற்கும் பாடல்.வேதா என்கிற அற்ப்புதமான இசையமைப்பாளர் இசையமைத்த பாடல்.மிகவும் நேர்த்தியான வாத்திய இசையில் மோகனம் நம்மைச் சிலிர்க்க வைக்கின்ற பாடல்.எளிமையும் இனிமையும் உச்சம் பெற்ற பாடல் என்றால் மிகை இல்லை.
44 . கொடியில் இரண்டு மலர் – படம் :உயிரா மானமா -பாடியவர்கள் : TMS + பி.சுசீலா – இசை:.விஸ்வநாதன்
மேல் சொன்ன பாடலின் பாதிப்பு உள்ளது போன்ற ஒரு உணர்வு . அது தெளிவாகப் புலனாகாமல் மறைக்கப் பட்டு விட்டாலும் இனிமையில் சோடை போகாத பாடல்.
45 . யோகிகளே நீர் யார் – படம் : ரிஷ்யசிங்கர் 1946] – பாடியவர்கள் :ரஞ்சன் + வசுந்தரா
1940 களில் வெளிவந்த மோகனராகப் பாடல்.அந்தக் காலத்தை ஒட்டிய இசை.மோகனத்தில் கிடைக்கின்ற மிகப் பழைய பாடல்களில் ஒன்று.
46 . பாடும் போது நான் தென்றல் காற்று – படம் :நேற்று இன்று நாளை 1973 – பாடியவர் :SPB – - இசை:விஸ்வநாதன்
1970 களில் வந்த மோகன ராகப் பாடல்களில் ஒன்று. மக்கள் விரும்பும் வகையில் இசையமைக்கப்பட்டுள்ள ” மெல்லிசைமன்னர் விஸ்வநாதனின் ” பாட்டு என்று சொல்லக்கூடிய முத்திரைப்பாடல்.வாத்திய அமைப்பிலும் மோகன இணக்கம் சிறப்பாக இருக்கும்.
47 . நீலக் கடலின் ஓரத்தில் – படம் :அன்னை வேளாங்கன்னி 1959 – TMS – இசை:G.தேவராஜன்
வேளாங்கன்னியின் புகழ் பாடும் G.தேவராஜனின் அற்ப்புதமான இசை வடிவம்.TMS ஓங்கி குரல் எடுத்து தன்னுடைய பாணியில் பாடிய பாட்டு.மோகனம் அற்ப்புதமாக ரீங்காரமிடும் பாடல்.
48 . பன்சாயி.. காதல் கவிதைகள் -படம் : உலகம் சுற்றும் வாலிபன் 1973 – TMS + LR ஈஸ்வரி – இசை:MS.விஸ்வநாதன்
உலகம் சுற்றும் வாலிபன் , உலகின் பல பாகங்களிலும் படமாக்கப்பட்ட திரைப்படம்.உலக இசையில் மோகனராகம் உள்ளது என்ற வகையில் அதற்குப் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்தில் அமைக்கப்பட்ட பாடல்.
ஜப்பானிய பாடலான ” ” தழுவலாக அமைக்கப்பட்ட பாடல்.
49 . தங்கத் தோணியிலே – படம் :உலகம் சுற்றும் வாலிபன் – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ் + பி.சுசீலா – இசை:.விஸ்வநாதன்
தென் கிழக்கு ஆசியாவில் பரவலாக அறியப்படும் மோகன ராகம் மீண்டும் அதே படத்தில் பயன்படுத்தப்பட்டது தற்ச்செயலான சம்பவம் அல்ல.
50 . புதிய வானம் புதிய பூமி – படம் :அன்பே வா 1967 – பாடியவர் :TMS – இசை:MS.விஸ்வநாதன்
தனது விடுமுறையை கழிக்க சிம்லா வரும் நாயகன் [ எம்ஜிஆர் ] , சிம்லாவின் இயற்க்கை அழகில் லயித்துப் பாடும் பாடல்.மலையும் குன்றுகளும் நிறைந்த காட்சிகளைக் கண்டதும் நாயகன் உற்சாகம் பொங்க பாடும் இந்த சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக மோகனம் பயன்பட்டுள்ளமை கனகச்சிதமானதாகும்குறிஞ்சி நிலத்திற்கு மிகவும் பொருத்தமானது மோகனம்.தன்னெளுச்சியும் ஆனந்தமும் விளைந்த பாடல்.
51 . ஒரு ராஜா ராணியிடம் – படம் :சிவந்த மண் 1968 – பாடியவர் : TMS +பி.சுசீலா – இசை:MS விஸ்வநாதன்
ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்ட இந்த திரைப்படத்திலும் அழகான இந்த மோகனம் இந்த இனிய பாடலாக வடித்துத் தரப்பட்டுள்ளது.இது மெல்லிசைமன்னரின் மேதமைக்குச் சான்று.
52 . கட்டழகுத் தங்க மகள் திருநாளோ – படம் :காவல்காரன் 1967 – பாடியவர் :பி.சுசீலா – இசை:MS.விஸ்வநாதன்
மெல்லிசைமன்னரின் இன்னுமொரு இனிய மோகன வார்ப்பு.பின்னணி இசை மிக அழகாக மோகனத்தை இசைக்கும்.
53 . மஞ்சளும் தந்தாள் மறைகள் தந்தாள் -படம் : தேனும் பாலும் 1971 – பாடியவர்கள் :பி.சுசீலா+ ஜிக்கி – இசை:MS.விஸ்வநாதன
கலைநயம் மிக்க அற்ப்புதமான இசை வார்ப்பு.அத்தி பூத்தது போல ஜிக்கியும் எஸ்.ஜானகியும் இணைந்து பாடிய மனதை மயக்கும் மெல்லிசைமன்னரின் சாகாவரம் பெற்ற பாடல்.கேட்கும் பொது ஆனந்தக் களிப்பு மேலிடும் பாடல்.
54 . கம்பன் ஏமாந்தான் – படம் :நிழல் நிஜமாகிறது – பாடியவர் :SPB – இசை:.விஸ்வநாதன்
விரக்தி மனப்பான்மை உணர்விலும் அற்ப்புதமாக ஜொலிக்கும் மோகனத்தை இவ்விதம் பல பல ரகமாய் தந்த மெல்லிசை மன்னரை எண்ணி எண்ணி நாம் வியக்கும் பாடல்.
55 . திருச் செந்தூரின் கடலோரத்தில் -படம் : தெய்வம் – பாடியவர்கள் :TMS + சீர்காழி – இசை:.குன்னக்குடி வைத்தியநாதன்
தனித்தனமையுடன் இசையமைக்கும் குன்னக்குடியின் வேகமான மோகனராகப் பாடல்.பாடியவர்களும் போட்டி போட்டுக்கொண்டு பாடிய அழகான பாடல்.
56 . ஒரு காதல் சாம் ராஜ்ஜியம் கண்ணில் – படம் :நந்த என் நிலா – பாடியவர்கள் :ஜெயச்சந்திரன் + T.K.கலா இசை:V.தட்சிணாமூர்த்தி
ஆற்றல் மிக்க இசையமைப்பாளரான V.தட்சிணாமூர்த்தயின் அழகான ,இனிமையான மோகனராகப்பாடல்.
57 . அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா -படம் : எதிர்நீச்சல் – பாடியவர்கள் :பி.சுசீலா+ TMS – இசை:V .குமார்
மோகனத்தில் நகைச்சுவை உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தய பாடல்.ஆச்சர்யமிக்க வகையில் மோகனத்தை பயன்படுத்திய பாடல்.
58 . வளை யோசையும் கை வளையோசையும் – படம் :அந்த ராத்திரிருக்கு சாட்சி இல்லை – பாடியவர்கள் :SPB +எஸ்.ஜானகி
1980 களில் வெளிவந்த மோகன ராகப்பாடல்.இசை : கே.வீ.மகாதேவன்
59. கண் வழியே கண் வழியே – ஜஸ்டிஸ் விஸ்வநாத் – TMS + பி.சுசீலா – இசை: வேதா
ஹிந்திப்பாடலான ” Panchhi Banu Udti ” என்று தொடங்கும் Chori Chori என்ற படத்தில் சங்கர் ஜெய்கிசன் இசையில் லதா மங்கேஸ்கர் பாடிய பாடலின் தமிழ் வடிவம்.
60 . அழகின் காலடியில் அமைதி காண வந்தேன் – TMS இசை : V.குமார்
61 . போறாளே பொன்னுத்தாயி – படம் : கருத்தம்மா – சுஜாதா + உன்னிமேனன் – இசை : ஏ.ஆர்.ரகுமான்
மேலே உள்ள ஏ.ஆர்.ரகுமானின் அழகான பாடலும் V.குமாரின் பாடலும் O.. Neele Gagen Ke Tele Film: Hamraaz [ 1967] Singer : Rafi Music: Ravi …. என்ற பாடலின் தழுவலாகும்.
62 . உலகம் எங்கும் ஒரே மொழி – நாடோடி – TMS + பி.சுசீலா – இசை: MS விஸ்வநாதன்
மிகவும் இனிமையான பாடல்.உலகமெங்கும் ஒலிக்கும் மோகனத்தில் காதால் என்ற பொது மொழியை பற்றிய அற்ப்புதமான பாடல்.எப்போது கேட்டாலும் திகட்டாத பாடல்.
63. ஒரு பக்கம் பார்க்கிறா ஒரு கண்ணை சாய்க்கிறா – படம் :மாட்டுக்கார வேலன் – பாடியவர் :TMS – இசை:கே.வி.மகாதேவன்
கேலியும் , கிண்டலும் நிறைந்த அழகிய மோகனம் மிளிரும் பாடல்.
64. வெள்ளரிக்காய் பிஞ்சு வெள்ளரிக்காய் – படம் :காதல் கோட்டை – பாடியவர் :கிருஷ்ணராஜ் – இசை:தேவா
கேலியும் , கிண்டலும் நிறைந்த தேவாவின் பாடல்.இந்தப் பாடல் சில வருடங்களுக்கு முன் இளையராஜா இசைமைத்த ” எங்க ஊரு பாட்டுக்காரன் ஐயா எல்லாத்திலும் கெட்டிக்காரன் ” என்ற பாடலை நினைவூட்டும்.
65. பிரியா பிரியா ஒ பிரியா – படம் :கட்டபொம்மன் – பாடியவர் :SPB +சித்ரா – இசை:தேவா
அழகான பாடல்.” உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே ” என்ற ஜிக்கியின் பாடலை ஞாபகப்படுத்தும் பாடல்.
வீர உணர்வைப் பிரதிபலிக்கவும் , ஒன்றைப் பறைசாற்றவும் பயன்படுத்தப்பட்ட பாடல்கள் சில:
66 . எல்லாம் இன்ப மயம் – படம் :எல்லாம் இன்ப மாயம் 1956 – பாடியவர்கள் :கண்டசாலா + குழுவினர் – இசை:கண்டசாலா
உற்சாகம் பொங்க புதுவருடத்தை வாழ்த்தி வரவேற்கும் பாடல்.இன்ப உணர்ச்சியும் உறுதியும் இணைந்த பாடல்.
67 . வரும் பகைவர் தனை வென்று – படம் :அம்பிகாபதி 1957 – பாடியவர் :TMS – இசை:ஜி.ராமநாதன்
படத்தின் கதாநாயகன் அமபிகாபதி , மன்னனை வாழ்த்தாமல் , அவனின் வெற்றிக்காகப் போர் புரிந்த வீரர்களையும் ,அவர் தம் பெற்றோரையும் ,மனைவிமக்களையும் வாழ்த்தும் பாடல்.வீர உணர்வு பாடலில் கொப்பளிக்கிறது.ஜி.ராமநாதனின் கம்பீரமான் இசையமைப்பு.T.M.சௌந்தரராஜன் ஓங்கிக் குரல எடுத்து அர்ப்புதமாக்ப் பாடிய பாடல்.
68 . சத்தியமே லட்சியமாய் செல்லடா – படம் :நீலமலைத் திருடன் 1959 – பாடியவர் :TMS – இசை:கே.வி.மகாதேவன்
தமிழ் திரையில் குதிரையில் சவாரி செய்யும் போது பாடும் பாடல் மரபைத் தொடக்கி வைத்த பாடல் என்று எண்ணுகின்றேன்.மெல்லிசைப்பாங்காகவும் வீர உணர்வு ததும்பும் வகையிலும் அமைக்கப்பட்ட திரை இசைத்திலகம் கே.வீ. மகாதேவனின் அழகான கற்பனை.கமபீரமான பாடல்.
69 . அச்சம் என்பது மடமையடா – படம் :மன்னாதி மன்னன் 1960 – பாடியவர் :TMS – இசை:விஸ்வநாதன் ராமமூர்த்தி
கம்பீரம் ,நெஞ்சுறுதி ,இன உணர்வு , விழிப்புணர்ச்சி போன்றவற்றை ஒன்றாகத் திரட்டித் தரும் லட்சியப்பாடல்.இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் இனம் புரியாததும் விவரிக்க முடியாததுமான ஒரு உணர்வு எழும்.அந்த அளவிற்கு மோகனம் ஆட்சி செலுத்தும் பாடல்.இது போன்ற இசை அற்ப்புதங்கள் சினிமா என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் நமக்குக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே!
இல்லாத ” திராவிட நாட்டை ” மீட்கப் போவதாக தி.மு.க வினர் நடாத்திய நாடகங்களை இது போன்ற பாடல்கள் வீச்சுடன் பிரச்சாரம் செய்தன என்பது அன்றைய அவலம்.
70 . வலியோர் சிலர் எளியோர் தமை – படம் :மணிமகுடம் – பாடியவர் :TMS – இசை:R.சுதர்சனம்
பாரதிதாசனின் கருத்தாழமிக்க பாடலுக்கு பிரிக்கவியலா நல்ல இசை வடிவம் கொடுக்கப்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.
“கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே ” என்ற கவி மூலத்தை இசை மிக அழகாக எடுத்துச் செல்லும் பாடல்.
71 . காலத்தை வென்றவன் நீ – படம் :அடிமைப்பெண் 1969 – பாடியவர்கள் :பி.சுசீலா + எஸ்.ஜானகி – இசை:கே.வி.மகாதேவன்
அடிமைகளாக இருந்த மக்களை விடுதலை செய்த ஒருவனின் பெருமையைப் பெண்கள் போற்றி புகழும் பாடல்.நெகிழ்சியும் ,உருக்கமும் , மிக அழகான சங்கதிகளும் நிறைந்த கே.வீ.மகாதேவனின் மோகனக் கொடை இந்தப்பாடல்.கேட்கும் போதெல்லாம் பரவசப்படுத்தும் பாடல்.
72 .நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் – படம் :உலகம் சுற்று வாலிபன் – பாடியவர்:சீர்காழி இசைவிஸ்வநாதன்
புலவர் வேதாவின் சிறப்பான பாடல்.சீர்காழி கோவிந்தராஜன் அர்ப்புதமாகப் பாடிய பாடல்.மோகனத்தின் இந்த வகைப் பாடல்களால் பயன் அடைந்தவர்கள் நடிகர்களே!குறிப்பாக எம்ஜிஆர் தனது அரசியல் கருத்துக்களை எடுத்துச் செல்ல பயன்படுத்திக் கொண்டார்.
73 . புது வெள்ளம் புது வெள்ளம் – படம் :புது வெள்ளம் 1975 – பாடியவர்:TMS – இசை:M.B.ஸ்ரீநிவாசன்
இசைமேதை M.B.ஸ்ரீநிவாசனின் மோகனப் படைப்பு.அடக்கப்பட்டவனின் உரிமைக்குரலாக ஒலிக்கும் பாடல்.
74 .சமாதானமே தேவை – படம் :மருத நாட்டு வீரன் – பாடியவர் :TMS இசை:எஸ்.வீ .வெங்கட் ராமன்
சமாதானத்தை வலியுறுத்தும் பாடலுக்குப் பொருத்தமான மோகன இசை.
75 .நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு – படம் :என் அண்ணன் – பாடியவர்:TMS இசை:கே .வீ .மகாதேவன்
மீண்டும் கே .வீ .மகாதேவனின் விடுதலை உணர்வைத் தூண்டும் பாடல்.வித்தியாசமான கற்பனை.
76 . வாழ்க நள ராஜனே – படம் :கடன் வாங்கிக் கல்யாணம் 1959 – பாடியவர்கள் :ஏ.எம்.ராஜா + சீர்காழி + பி.லீலா – இசை:எஸ்.ராஜேஸ்வரராவ்
இந்த திரைப்படத்தில் வரும் நாடகத்தில் பாடும் பாடல்.ஏ.எம்.ராஜா + சீர்காழி + பி.லீலா போன்றோர் இணைந்து பாடிய அபூர்வமான பாடல்.கர்னாடக இசைப்பணியில் அமைந்த நாடகப் பாடல்.
77 . மன்னவர் பொருள்களை – படம் :கர்ணன் 1964 – பாடியவர் :TMS – இசை:.விஸ்வநாதன் ராமமூர்த்தி
கர்ணனை புகழ்ந்து இந்திரன் வாழ்த்தும் விருத்தப் பாடல்.
75 . வெற்றி மீது வெற்றி வந்து – படம் :தேடி வந்த மாப்பிள்ளை – பாடியவர் :SPB – - இசை:விஸ்வநாதன்
பெண் குரல் சாயலில் SP பாலசுப்ரமணியம் பாடிய ஆரமபகாலப் பாடல்.மோகனத்தின் இனிமை குன்றாத இசையமைப்பு
78 . அகில பாரத பெண்கள் திலகமாய் – படம் :பெண் – பாடியவர் :எம்.எஸ்.ராஜேஸ்வரி – - இசைமேதை ஆர்.சுதர்சனம் இசையமைத்த பெண் விடுதலையை வெளிக்கொணரும் மோகன ராகப்பாடல்.
இவை போன்று இன்னும் நிறைய பாடல்கள் இருக்கலாம்.
.இளையராஜாவின் மோகனம் .
தமிழக நாடுப்புற இசை உள்ளுணர்விலும் ,செவ்வியல் இசைராகங்களிலும் புதிய ஒளி பாய்ச்சிய திரை இசையமைப்பளர்களில் முதன்மையானவர் இசைஞானி இளையராஜா.நாடுப்புற இசையின் இதய ஒலியும் ,ராகங்களின் நுண் அலகுகளும் ஒன்றிணைந்த பாடல்களைத் தந்து தமிழக மக்களின் இதயஒலியை இசைச் சனாதனிகள் கைகளிலிருந்து விடுவிதது தன்னுடைய இசைத்திறத்தால் தமிழக மக்களின் உள்ளங்களில் கலந்த இசைமேதை ஆவார்.
அவரது வருகை.தமிழ் சினிமாவில் நிகழ்ந்த இசை நூதன நிகழ்வு [ Music phenomenon ] . மண் சார்ந்த இசை செல்வத்தை வழங்கும் ஒரு பேராற்றல் மிக்க கலைஞனை மக்கள் அடையாளம் கண்டு கொண்டாடினர்.
இளையராஜா தமிழக நாட்டுப்புற இசையின் ஆன்மாவை காட்டிய விதம் பன்மடங்கு நாட்டுப்புற பாடல்கள் , இசைப்பாடகர்கள் வெளிவரக் காரணமாயிற்று.” எல்லாம் வெறும் தன்னானே தானே ” என்று இகழ்ந்த நாட்டுப்புற இசைக்கு மவுசு ஏற்ப்பட்டது.
ராகப் பயன் பாட்டிலும் தனித் தன்மையை காட்டிய இசைஞானி தனக்கு முன்பிருந்த இசை மேதைகளைப் பின்பற்றிச் சென்றாலும் , அதிலும் ஓர் புதுமையை [ Novelty ] காட்டி வெற்றி பெற்றவராவார்.மோகனத்தில் அவர் முன்னோடிகளான பல இசை யயமைப்பாளர்க்ளின் பாடலகளைப் பார்த்தோம்.அவற்றில் பெரும்பாலான பாடல்களின் மெட்டுக்கள் கிட்டத்தட்ட யார் அதைப் போட்டார்கள் என்பதை இனம் காண முடியாத வண்ணம் [ ஒரேமாதிரியாக ]அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.இசையமைப்பாளர்கள் யார் என்று அந்தப் பாடல்களை வைத்துக் கண்டு பிடிக்க முடியாதளவு க்கு ஒரே தன்மை இருக்கும்.
இசை மேதைகளான பெண்டிலாய நாகேஸ்வரராவ் , எஸ்.ராஜேஸ்வரராவ் ,T.சலபதிராவ் , R.சுதர்சனம் , கண்டசாலா , TGலிங்கப்பா ,
சில சமயம் விஸ்வநாதன் ராமமூர்த்தி , கே.வீ .மகாதேவன் , R.கோவர்த்தனம் , வேதா ,GK வெங்கடேஷ் இன்னும் பிற இசைய்மைப்பாளர்களின் பாடல்கள் இன்னார் தான் இசையமைத்தார்கள் என்று கண்டு பிடிக்க முடியாதளவு இருப்பதையும் அவதானிக்கலாம்.
KVமகாதேவன் இசையமைத்த ” மயக்கும் மாலை பொழுதே நீ போ போ ..” என்ற குலேபகாவலி திரைப்படப் பாடலை உதாரணம் கூறலாம்.ராமண்ணா இயக்கத்தில் வெளியான ” கூண்டுக்கிளி ” படத்திற்காக KVமகாதேவன் அவர்களால் இசையமைக்கப்பட்ட இந்தப் பாடலை , தன்னுடைய மற்றொரு படமான குலேபகாவலி யில் பயன்படுத்திக் கொண்டார்.குலேபகாவளிக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள்.
இன்றுவரை இந்தப் பாடலை இசையமைத்தவர்கள் மெல்லிசை மன்னர்களே என்று வானொலிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.பின்னர் 1960 களில் தனித் தன்மை புலப்பட்டாலும் அதிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் குறைந்த அளவிலேயே வெளிப்பட்டன.நடிகர்களின் பெயர்களை வைத்து அடையாளம் காட்டபட்ட அளவிற்கு இசையமைப்பாளர்களின் படைப்புக்கள் என்று பரந்து பட்ட மக்கள் மத்தியில் புகழ் பெறவில்லை.
ஆனால் இந்தக் குறையை நிவர்த்தி செய்தது இளையராஜாவின் இசையே.அவருடைய பாடல்களைப் பாடும் எந்த பாடகரோ பாடகியோ , அல்லது நடிகரோ யாராக இ ருந்தாலும் அங்கே இளையராஜா இசை என்றே அறியப்படும்..அந்த அளவுக்கு அவரது இசை அவரை அடையாளம் காட்டி இருக்கிறது.
இளையராஜாவுக்கு முந்தைய இசைமேதைகள் எல்லோரும் மரபு வழி நின்றும் , மீறியும் மோகனத்தில் நல்ல பாடல்களைத் தந்தாலும் ,அவர்களை விட மேலைத்தேய ஹார்மொனி இசையை விஸ்தாரமாக நமது மரபு இசையுடன் இணைத்த பெருமை இளையராஜாவின் இசைச் சாதனை ஆகும்.இம்மாதிரியான இசைக்கலவை இசை எனபது தமிழுக்கு மிகவும் புதியது.இப்படிப்பட்ட ஹார்மொனி கலந்த இசையை இந்தியாவில் வேறெங்குமே கேட்க முடியாது.இந்தவகை இசையை பெரும்பாலும் ஒவ்வொரு பாடலிலும் கேட்டு மிகிழலாம்.
01. கண்ணன் ஒரு கைக் குழந்தை – படம் :பத்திரகாளி – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ பி.சுசீலா – இசை:இளையராஜா
தம்பதிகளின் அன்னியோனியத்தை விளக்கும் உன்னதமான பாடல்.வாத்தியங்களின் இணைப்பு மோகனத்தின் தன்னிகரில்லா இனிமையைக் காட்டிய இன்னுமொரு உச்சமான பாடல்.பொருத்தமான பாடகர்களின் தெரிவும் பாடலை இனிமைக்கு முக்கியமான காரணம்.
எப்போது கேட்டாலும் என்னையறியாமல் ஆஹா என்று சொல்ல வைக்கின்ற தேனினும் இனிய பாடல்.
ராஜாவின் ஆரம்பகால இந்தப்பாடல் இசைமேதைகளின் வரிசையில் அவரை அமர்த்திய பாடல்.
“ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா “
“அன்னமிடும் கைகளிலே ஆடி வரு பிள்ளை இது
உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லை அது “
என்ற வரிகளை பாடும் போது உருகாதவர்களையும் உருக வைத்து விடுகிறது இசை.மோகனத்தின் இனிமையின் எல்லை இதுவோ என எண்ண வைக்கும் பாடல்.
02. மீன் கொடித் தேரில் மன்மதராஜன் – படம் :கரும்புவில் – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ ஜென்சி – இசை:இளையராஜா
03. கண்மணியே காதல் என்பது – படம் :ஆறிலிருந்து அறுபது வரை – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
புதுமையான் பின்னனி இசை ,ஹம்மிங் என்று இளையராஜா அமர்க்களம் செய்த பாடல்.முன்னைய சந்ததியினரும் ரசித்த பாடல்.
04. நிலவு தூங்கும் நேரம் – படம் :குங்குமச் சிமிழ் – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
இசைஞானியின் இசை நெசவுகளில் தான் எத்தனை ஜாலங்கள் , எத்தனை வினோதங்கள் ! இன்பமும் ,துன்பமும் தரும் உணர்வலைகளில் நம்மை மிதக்க வைக்கும்.
“வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்
வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்
ஏன் மயக்கம் ஏன் தயக்கம்
கண்ணே வா இங்கே “
என்ற இந்தப் பாடலின் சரணம் மிக கனிவானது .
05. பூவில் வண்டு கூடும் – படம் :காதல் ஓவியம் – பாடியவர் :எஸ்.பி.பி – இசை:இளையராஜா
செவ்வியல் இசை பாணியில் அமைந்த பாடலிலும் வாத்திய இசைக் கலப்புகளில் புது வியாக்கியானம் செய்யும் இசை ஞானியின் மோகனம்.என்னுடைய 13 வயது மகன் திரும்ப திரும்ப கேட்கும் பாடல்.
06. நான் ஒரு பொன் ஓவியம் கண்டேன் – படம் :கண்ணில் தெரியும் கதைகள் – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
ஒரு ராகத்தை அப்படியே திருப்பி திருப்பி சலிப்புத்தரும் ஒரே முறையில் போடுவதால என்ன பயன் ?
இந்த ராகத்தை புதிய திசையில் இழுத்து இழுத்து ஒவ்வொரு கணமும் இசையில் புதிய சப்தங்களால் புதிய கிளர்ச்சியை நமக்குள் கிளர்த்தும் அர்ப்புதத்தை செய்து காட்டிய இசைஞானியின் ஆழ்ந்த படைப்பாற்றலுக்கு எடுத்துக்காட்டான பாடல்.
இந்தப்பாடல் அணு அணுவாக ரசிக்க வைக்கும் அளவுக்கு புதிய புதிய திருப்பங்களைக் கொண்ட பாடல்.இசைக்குயில்கள் சுசீலாவும் ஜானகியும் இணைந்து பாடிய ஆனந்தம் இணைந்தெளும்பும் புதுமைப் பாடல்.
மலிவான தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு பாடலா..?
07. நான் உந்தன் தாயக வேண்டும் -படம் : உல்லாசப் பறவைகள் – பாடியவர் :எஸ்.ஜானகி- இசை:இளையராஜா
எளிமையான மேலோடி .விறுவுருப்பான தாளம்.அனுபல்லவிக்கு பின் வருவது பொலிவு தரும் இடையிசை.சரணத்திக்கு முன் வரும் இடையிசை மோகன பேரொளியை வீசி நிற்கும்.
08. வந்ததே ஆகா குங்குமம் – படம் :கிழக்கு வாசல் – பாடியவர் :சித்ரா – இசை:இளையராஜா
” விட்டு விடுதலையாகி நிற்ப்பாய் சிட்டுக் குருவி போல ” என்பதற்கு ஏற்ப நம்மை வானில் மிதக்க வைக்கும் பாடல்.மிருதங்கம் என்ற வாத்தியத்தை கோரசுடன் இணைத்தது மட்டுமல்ல வயலின் இசை மகிழ்ச்சிப் பெருக்கால் துள்ள வைக்கின்ற பாடல்.சித்திராவின் குரலில் பாடல் மின்னி ஜொலிக்கறது.சங்கீதம் சந்தோசம் உல்லாசம் என்றால் அது மோகனத்தில் வரும் போது மடை திறந்த வெள்ளம் அல்லவா.
09. ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு – படம் :தர்மயுத்தம் – பாடியவர் :மலேசியா வாசுதேவன் – இசை:இளையராஜா
தங்க ரதத்தில் மோகனராகத்தை ஏற்றி வைத்த ராஜாவின் ஏகாந்தமும் ,அன்புணர்ச்சியுமிக்க பாடல்.மேலைத்தேய ஹார்மொனி இசையின் நுண் இன்பத்தை பாரம்பரிய தமிழ் இசைச் செல்வமாகிய மோகனத்தில் இணைத்த சாதனைப்பாடல்.
10. தேன் மல்லிப் பூவே – படம் : – பாடியவர்கள் :T.M.சௌந்தரராஜன் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
மோகனத்தின் சாரலலால் இசை நாதத்தை அள்ளி வீசும் எளிமையான பாடல்.காற்றலையில் கலந்த தேனமுதுகளில் ஒன்று இந்தப் பாடல்.
11. கீதம் சங்கீதம் நீ தானே – படம் :கொக்கரக்கோ – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
பாரம்பரிய ராகத்தினை நவீன இசைக்குள் இடையே நடை பயிற்றி வந்த இசைஞானியின் பரீட்சாத்தப் பாடல்.ஹம்மிங்கில் ராகத்தின் உயிர்நிளைகளைத் தொடும் பாடல்.
12. எங்கும் நிறைந்த இயற்கையில் – படம் : இது எப்படி இருக்கு – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ் +எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
மலையில் இருந்து இறங்கும் குளிர் மேகம் நம் தோள்களைத் தழுவும் சுகம் தரும் பாடல்.குறிப்பாக ஜேசுதாஸ் குரலில்
“வெண்பனி போல் அவள் தேகம் – அள்ளும்
செங்கனி போல் இதழ் மோகம் தேனாக “
என்ற வரிகளைப் பாடும் போது நெஞ்சை அள்ளும்.அத்துடன் வரும் குக்குகூ ..குக்குகூ..குக்குகூ என்ற ஹம்மிங் மோகனத்தைக் கூவும்.
13. பொன்னாரம் பூவாரம் -படம் :பகலில் ஒரு இரவு – பாடியவர் :SPB – இசை:இளையராஜா
நாட்டுப்புற இசையின் தாள அமைப்பில் உள்ள மெட்டுக்கு நுண்மையாக மேலைத்தேய ஹார்மோனி இசையின் ஒட்டுறவை மிக லாவண்யமாக இணைத்து இனிமை ததும்ப தந்த இசைஞானியின் பாடல்.
14. இரு பறவைகள் மலை முழுவதும் – படம் :நிறம் மாறாத பூக்கள் – பாடியவர் :ஜென்சி – இசை:இளையராஜா
இது மோகனம் தந்த அதிசயப்பாடல்.எத்தனை ,எத்தனை வண்ணங்களை அள்ளி வீசிய இசைஞானியின் இசை ஓவியம்.மேற்கு இசையின் கவுண்டர் பாயிண்ட் [ மெடுக்குள் மெட்டு இணையும் இசை ] என்ற இசைத் துணுக்குகளை வாத்திய இசையில் கொட்டி இன்பத்தின் வியனுலகில் நம்மை மிதக்க வைத்த பாடல்.
15. நின்னுக் கோரி வர்ணம் – படம் :அக்னி நட்சத்திரம் – பாடியவர் :சித்ரா – இசை:இளையராஜா
நவீன தொழிலில் நுட்பத்தில் வந்த நவீன மோகன இசை வடிவம்.Programming என்ற வகையில் இளையராஜா பரீட்சாத்த இனிமையான பாடல்.செவ்வியல் இசை கீர்த்தனையான ” நின்னுகோரி ” யை அடியாகக் கொண்டு ஆரம்பிக்கும் பாடல்.ஒலியமைப்பிலும் , பாடல் இசையமைப்பிலும் விதந்து பேசப்பட்ட பாடல்.சித்ரா மோகனம் ததும்பப் பாடிய பாடல்.
16. வான் மேகங்களே வாழ்த்துங்கள் – படம் :புதிய வார்ப்புக்கள் – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
மென்மையான புல்லாங்குழல் இசையுடன் ஆரம்பிக்கும் ஆச்சரியம் தரும் மோகனத்தை தனது இசை ஆளுமையால இனிமையும் ,எழிலும் பின்னிப்பிணைத்து இசைஞானி நெய்த இசை நெசவு.இது தனித்துவமான மோகனச் சிற்பம்.
17. கஸ்தூரி மானே கல்யாண தேனே – படம் :நல்லவனுக்கு நல்லவன் -பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ உமாரமணன் – இசை:இளையராஜா
கைத்தட்டு ஓசையும் ,அதிரடியான ,ஆச்சர்யமிக்க மிருதங்க இசையுடன் தொடங்கும் புதுமையான கோணத்தில் மோகனத்தை அணுகிய பாடல்.குறிப்பாக செனாய் என்ற [ பெரும்பாலும் அழுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ]வாத்தியத்தை துள்ளும் இனிமைக்கும் மகிழ்ச்சிக்கும் பயன் படுத்திய பாங்கும் பெண்குரலில் ஹோர்ஸ இசையும் அமர்க்களம் செய்த பாடல்.
18. ஒரு கணம் ஒரு யுகமாக – படம் :நாடோடித் தென்றல் – பாடியவர்கள் :இளையராஜா + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
1990 களில் வெளிவந்த சிறந்த பாடலகளைக் கொண்ட
நாடோடித் தென்றல் படத்தில் வெளியான நல்ல பாடல்களில் ஒன்று.இன்பமான வலி என்று சொல்வார்களே அந்த உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தும் காதல் ராகம்.இடையே மென்மையாக ஓடிச் செல்லும் பின்னனி இசை புதுமையானதாக இருக்கும்.
19. மலரே நலமா – படம் :உரிமை – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ எஸ்.ஜானகி- இசை:இளையராஜா
கோடி தரம் கேட்டாலும் மோகனம் சலிக்காது எனபதற்கு இந்தப்பாடலும் சாட்சி. நயன பாசை பேசும் காதலர்களின் மதுரப்பாடல்.
20. வான் போலே வண்ணம் கொண்டு – படம் :சலங்கை ஒலி – பாடியவர்கள் :எஸ்.பி.பி + எஸ்.பி.ஷைலஜா – இசை:இளையராஜா
மீண்டும் செனாய் இசையை மகிழ்ச்சிக்கு பயன்படுத்திய ராஜாவின் வண்ணம் கொண்டு வந்த மோகனம்.வீணாய் போகும் ஒரு காட்சிக்கு இந்தப்பாடல் பய்னபட்டிருக்கிறது.
21. இதயம் ஒரு கோயில் – படம் :இதயகோயில் – பாடியவர் :இளையராஜா – இசை:இளையராஜா
உயிரை பிசையும் பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் ஒன்று என்று துணிந்து கூறலாம்.உயிரில் கலந்து பாடும் போது எதுவும் பாடலே என்பதற்கேற்ப பாடபட்ட பாடல்.இசைத் தாய் தவமிருந்த பெற்ற மகனின் ஆதம்ராகம் இந்த மோகனமான பாடல்.
இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் பொங்கி பெருகி வரும் உணர்வின் உன்னதமான நிலைகளை தொட்டு ,சிலிர்க்க வைப்பதுடன் , இனம் புரியாத சோகத்தையும் ஏற்ப்படுத்தும். செனாய் வாத்திய இசை உயிர் நிலைகளை தொடும்படியாக இசையமைக்கப்பட்ட பாடல்.
22. தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம் -படம் :பகலில் ஒரு இரவு – எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
ஒரு தாளத்தையும் ,பெண்களின் கோரஸ் இசையையும் கொண்டே முழுப் பாடலையும் அமைத்த் இசைஞானியின் பரிசோதனைப் பாடல்.மோகனம் கனியாய் இனிக்க்றது.
23. காத்திருந்தேன் தனியே – படம் :ராசா மகன் – பாடியவர்கள் :சந்திரசேகர் + லேகா – இசை:இளையராஜா
அழகும் இனிமையும் மிக்க மோகனத்தை வளப்படுத்த இசைஞானி தந்த மேனமையான மேலோடிப் பாடல்.புதிய பாடகர்கள் மிக அருமையாகப் பாடிய பாடல்.
24. என்ன சமையலோ – படம் :உன்னால் முடியும் தம்பி – பாடியவர்கள் :எஸ்.பி.பி + குழு- இசை:இளையராஜா
மோகனத்தில் எல்லாவிதமான பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம் எனபதற்கு மோகனத்தில் ஆரம்பிக்கும் இந்த நகைச்சுவைப் பாடலும் நல்ல உதாரணமாகும்.பின் ராகமாலிகையாகும் இந்தப் பாடலில் நாதஸ்வர இசை அமோகமாக இருக்கும்.
25. ஆசை நெஞ்சின் கனவுகள் – படம் :முகத்தில் முகம் பார்க்கலாம் – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் + பி.சுசீலா – இசை:இளையராஜா
இளையராஜவின் ஆரம்பகாலப் பாடல்.மரபு ராகங்களில் புதிய இசையை சலிக்காது இணைக்கும் தனிப்பாங்கு காட்டும் நல்ல பாடல்.
26. மாலை நிலவே மன்மதன் – படம் :பொண்ணுக்கேற்ற புருஷன் – பாடியவர்கள் :மனோ + சித்ரா – இசை:இளையராஜா
” ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் ” என்ற பாடலைப் போன்ற , குதிரை வண்டியில் போவது போல ஒரு சூழ்நிலைக்கு போடப்பட்ட பாடல்.அந்தப் பாடலின் சாயல் சிறி துமில்லாத பாடல்.மோகனராகம் கம்பீரமாக வீறுநடை போடும் அருமையான சங்கதிகள் நிறைந்த பாடல்.
27. மல்லிகை மாலை கட்டி – படம் :புதிய ராகம் – பாடியவர் :இளையராஜா – இசை:இளையராஜா
தவறான ஒருவனை மணந்த பெண் ஒருத்தியின் வேதனையை வெளிப்படுத்துவதும் ,அவளை தேற்றுவதுமான் பாடல்.மோகனத்தில் மனதை வருடும் இசை நம்மை வசப்படுத்துகிறது.
28. சமையல் பாடமே – படம் :மணிப்பூர் மாமியார் – பாடியவர்கள் :SPB எஸ்.பி.சைலஜா – இசை:இளையராஜா
மோகனத்தில் வெளி வந்த நகைச்சுவைப் பாடல்.மோகனத்தில் ஆரம்பித்து ராக மாலிகையாக தொடரும் பாடல்.இந்தப் பாடலை உன்னால் முடியும் தம்பி படத்தில் சற்று மாற்றத்துடன் மீண்டும் பயன்படுத்தினார்கள்.
29. தெரியாமல் மாட்டிக்கொண்ட – படம் :மாமியார் வீடு – பாடியவர்கள் :இளையராஜா + எஸ்.என்.சுரேந்தர் + குழு – இசை:இளையராஜா
இதுவும் ஆண் குரல்களில் ஒலித்த நல்ல இனிமையான நகைச்சுவைப் பாடல்.மோகனத்தின் சிறப்பான சங்கதிகளை நகைச்சுவையாக பாடியிருப்பார்கள்.
30. அடி அரைச்சு அரைச்சு – படம் :மகாராசன் – பாடியவர்கள் :மனோ + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
நாட்டுப்புற இசைத் தாளத்தில் துள்ளிக் குதித்து ஓடும் மோகனத்தை மிக அருமையாக குழைத்து நம்மை பிணைத்த இசைஞானியின் குதூகலப்பாடல்.
31. மாலை சூடு மாலை நேரம் – படம் :புதிய ராகம் – பாடியவர் :சித்ரா- இசை:இளையராஜா
மேற்கத்தேய இசைத் தாளத்தில் கட்டப்பட்ட இனிமையான மோகனம்.
32. அழகான நம் பாண்டி நாட்டினிலே – படம் :புதுபட்டி பொன்னுத்தாயி – பாடியவர் :இளையராஜா
ஒவ்வொரு பாடலிலும் வெவ்வேறு விதமாக பாடல் அமைப்பைத் தரும் இசைஞானி மதுரை மீனாளைப் புதுமையாக புகழ்ந்து பாடும் பாடல்.உறுமி , செனாய் வாத்தியங்கள் பாடல் இயக்கத்தில் அழகு சேர்க்கின்றன..பின்னணி பாடியவர்களும் இனிமை சேர்கிறார்கள்.
33. கேளடா மானிடா இங்கு -படம் :பாரதி 2000 – பாடியவர் :ராஜ்குமார் பாரதி – இசை:இளையராஜா
ஒரு விசயத்தைப் பறை சாற்ற மோகனம் மிகவும் உகந்த ராகம் என்ற வகையில் மிகவும் கம்பீரமாக இசையமைக்கப்பட்ட பாடல்.
பாடலில் ” பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் ” என்ற சரணத்திற்கு முன்பாக இடை யிசையாக வரும் நாதஸ்வர இசையும் அதனுடன் இணைந்த நாட்டுப்புற இசைத் தாளமும் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.
இந்தப் பாடலை பாடிய ராஜ்குமார் பாரதி [ பாரதியாரின் பேரன் ] மிகவும் எழுச்சி பொங்கப் பாடியிருப்பது வெகு சிறப் ப்பு எனலாம்.
34. கூட வருவியா என்னோடு – படம் : வால்மீகி – பாடியவர் :சாயா ஷிண்டே – இசை:இளையராஜா
மிகச் சமீபத்தில் வெளிவந்த இந்தப்பாடல் ஆரம்ப இசையிலேயே மோகனத்தைச் சொரிந்து இயற்க்கை வனப்பின் அழகை நம் மனத்திரையில் ஓவியமாக்கி விடும் அர்ப்புதப் பாடல்.
” என்னை வென்று ” என்ற வரிகளைத் தொடர்ந்து வரும் ஹம்மிங் மோகனத்தை மீட்டெழுப்பி நம்மை இசையில் பெரும் செல்வந்தராக்கி , நம் வாழ்வை விலைமதிப்பற்றதாக்கி விடுகிறது.ஒரு தேவதை நம்மை அனைத்துக் கொண்டு வானவீதியில் பறப்பது போன்ற உணர்வை தரும் பாடல்.இசைஞானியின் முத்திரைப்பாடல்.
35. ஒரு ராகம் பாடலோடு காதில் – படம் :ஆனந்த ராகம் – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+எஸ்.ஜானகி- இசை:இளையராஜா
எத்தனை விதமான கோணத்திலிருந்து புதியதாக பாடல்களைத் தந்தாலும் அதிலும் ஒரு தனித்துவத்தைக் காட்டும் இசைஞானியின் இனிமையான பாடல்.அதிசயக்கத்தக்க வகையில் எழுச்சியூட்டும் தாள லயத்துடன் ஆரம்பிக்கிறது பாடல். இது போன்ற ஒரு கற்பனை எழ மனதில் அந்த ராகத்தில் அவர் எவ்வளவு மூழ்கியிருப்பார் என எண்ணாமல் இருக்க முடியவில்லை!இது போன்ற கற்பனை இசைஞானி போன்றோருக்குத்தான் சாத்தியமோ என எண்ண வைக்கும் பாடல்.
எங்கள் வாழ்வோடு இணைந்து விட்ட பாடல்.
36. ஏ.பி.சி .. நீ வாசி சோ ஈசி – படம் :கைதியின் டயரி – பாடியவர்கள் :கே.ஜே.ஜேசுதாஸ்+ வாணி ஜெயராம் – இசை:இளையராஜா
L’Arlésienne Suite Number One, 4th movement, called ‘Carillon’ என்ற சிம்பொனி இசைவடிவத்தின் ஆரம்ப இசையை வைத்துக் கொண்டு இளையராஜா செய்த மோகன விளையாட்டு.மேலைநாட்டிசையின் மோகனத்தை நமக்குக் காட்டிய பாடல்.
37. உன்னாலே நான் பெண்ணானேனே – படம் :என்னருகில் நீ இருந்தால் – பாடியவர்கள் :மனோ + உமாரமணன் – இசை:இளையராஜா
மோகனத்தின் செழுமையும் ராஜாவின் கற்பனை வளமும் ஒன்றிணைந்து இனிமை கொட்டும் பாடல்.மோகனம் என்றால் இனிமை. அதற்க்கு சிறந்த உதாரணம் இந்தப் பாடல்.
38. ஆலோலங் கிளி தோப்பிலே – படம் :சிறை சாலை – பாடியவர்கள் :எஸ்.பி.பி + சித்ரா – இசை:இளையராஜா
மோகனம் என்ற மூலத்திலிருந்து எத்தனை விதமான கற்பனைகள் தந்த சினிமா இசையை தரம் குறைந்த இசை என்று கூற முடியுமா? என் வியக்க வைக்கும் இசைஞானியின் இன்னுமொரு அழகான மோகன வார்ப்பு.
39. இந்த அம்மனுக்கு எந்த ஊரு – படம் :தெய்வ வாக்கு – பாடியவர் :இளையராஜா – இசை:இளையராஜா
நாடுப்புற இசைச் சந்தப் பரிவாரங்களுடன் நகைச்சுவை கலந்து கம்பீரமாய் நிறைவு தரும் மோகனம்.
தன மனம் லயித்த விதங்களில் எல்லாம் வாடாத அழகிய மலர்களைப் போன்ற மோகன மலர்களை அள்ளியிறைத்த இசைஞானியின் கற்பனை வளம் பிரமிக்கத் தக்கது. நம் வாழ்வின் ஏதாவது நிலையில் நாம் கேட்டுக் கேட்டு வியக்க வைக்கும் இன்புறத் தக்க இளையராஜாவின் இன்னும் சில பாடல்கள் இதோ :
40. குண்டு மல்லி குண்டுமல்லி -படம் :மாயா பஜார் – பாடியவர்கள் :ஹரீஸ் ராகவேந்தரா + பவதாரணி – இசை:இளையராஜா
41. ராதே என் ராதே வா ராதே – படம் :ஜப்பானில் கல்யாண ராமன – பாடியவர் :ரமேஸ் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
42. இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் – படம் :பூவரசன் – பாடியவர்கள் :எஸ்.பி.பி + சித்ரா – இசை:இளையராஜா
43. எனக்கொரு மகன் பிறப்பான் – படம் :அண்ணனுக்கு ஜெ – பாடியவர்கள் :எஸ்.பி.பி + குழு – இசை:இளையராஜா
44. நாள் தோறும் எந்தன் கண்ணில் – படம் :தேவதை – பாடியவர்கள் :இளையராஜா + கவிதா கிருஷ்ண மூர்த்தி – இசை:இளையராஜா
45. எந்த ஆத்து பையன் அவன் – படம் :மணிப்பூர் மாமியார் – பாடியவர்கள் :மலேசியா வாசுதேவன் எஸ்.பி.சைலஜா – இசை:இளையராஜா
46. வேல் முருகனுக்கு மொட்டை – படம் :புயல் பாடும் பாட்டு – பாடியவர்:மலேசியா வாசுதேவன்- இசை:இளையராஜா
47. வா வா வஞ்சி இள மானே – படம் :குரு சிஷ்யன் – பாடியவர்கள் :மனோ + சித்ரா- இசை:இளையராஜா
48. கன்னித் தேனே இவள் மானே -படம் : – பாடியவர்கள் :தினேஷ் + எஸ்.ஜானகி
49. வயசுப் புள்ளே வயசுப் புள்ளே – படம் : அண்ணன் – பாடியவர்கள் :இளையராஜா + சுஜாதா – இசை:இளையராஜா
50. ராதே என் ராதே வாராதே – படம் : யப்பனில் கல்யாணராமன் – பாடியவர்கள் :தினேஷ் + எஸ்.ஜானகி – இசை:இளையராஜா
51. கேட்கலியோ கேட்கலியோ -படம் :கஸ்தூரிமான் – பாடியவர்கள் :ஹரிகரன் + – இசை:இளையராஜா
52. கேட்குதடி கூ ..கூ கேட்கலியோ – படம் : கட்டுமரக்காரன் – பாடியவர்கள் :SPB + சித்ரா – இசை:இளையராஜா
53. அடடா இங்கே விளையாடும் -படம் : மாயா பஜார் -பாடியவர்கள் : ஜோலி ஏப்ரகாம்+ பவதாரணி – இசை:இளையராஜா
54. குக்கூ கூ கூவும் குயிலக்கா – படம் :வள்ளி – பாடியவர் :லதா ரஜனிகாந்த் – இசை:இளையராஜா
55. சாய்ந்து சாய்ந்து நீ – படம் :நீ தானே என் பொன் வசந்தம் – பாடியவர்கள் :சங்கர் ராஜா + NSK ரம்யா – இசை:இளையராஜா
பக்திப்பாடல்கள் சில:
திரு முருகா ஒரு முறை வா திருவடி சரணம் கந்தா – சீர்காழி
தங்கத்தாமரைத் தொட்டிலிலே – சூலமங்கல சகோதரிகள்
மாணிக்க வீணை ஏந்தும் – பி.சுசீலா
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் – ராதா மாணிக்கம்
உலக இசையில் மோகனத்தை கேட்டுப்பாருங்கள்.Youtube இல் இந்தப்பாடல்கள் கிடைக்கின்றன.
01 auld lang syne – lea michele
02 Traditional Thai Music
03 Sukiyaki—Kyu Sakamoto
04 Kong Ling – Sukiyaki 196x
05 tai orathai thailand
06 Sukyaki – Yasmin Lucas
07 Blue Diamonds – Sukiyaki 1963
08 Sukiyaki (Live) – English Version
09 Sukiyaki and Edelweiss
தமிழர்களின் வாழ்நிலையிலிருந்து உருவான தொல்லிசையின் உன்னதத்தையும் ,அது தருகின்ற அழகியலையும் பறை சாற்றி வருபவள் தொல் மூதாட்டியான எங்கள் மோகனம்.
நம் மரபுரிமையான இந்த ராகத்தை , அவளின் அழகை , வனப்பை காலத்திற்க்குக் காலம் இடையறாது ,சலிப்பின்றி அவளை என்றென்றும் இளம் குமரியாக நம் முன் உலவவிட்ட இசைமேதைகளான திரை இசையமைப்பாளர்களைப் பெருமையுடன் நினைவு கூருதல் தகுந்த செயலே.
தென் கோடித் தமிழகத்தில் தொல் மக்களான இடைக்குல சிறுமிகள் துள்ளிக் கூத்தாடிப் பாடி மகிழ்ந்த ” முல்லைத் தீம்பாணி ” யான மோகனத்தைத்தான் இன்றளவும் அதன் ஆதார சுருதியுடன் பாடி மகிழ்கின்றோம்.அதை காப்பாற்றி வருகின்ற இசைக் கலைஞர்களின் , மக்களின் நுண் ரசனை போற்றத்தக்கது.
தமிழ் மக்களின் பெருமைகளில் ஒன்று இந்த மோகனம்.
